சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சூழல் காரணமாக, முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால், எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், ஒரே நேரத்தில் சுமார் 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ள தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக, ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி சுட்டிக்காட்டப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக அளவில் முதலீடுகளை செய்து வருவதால், பாரம்பரிய பணிகளில் இருந்த ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மனிதர்கள் செய்து வந்த வேலைகளை ஏஐ தொழில்நுட்பமே மிக எளிதாக செய்து முடிப்பதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ள ஏஐ தொழில்நுட்பம், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 4,800 ஊழியர்களின் பணிநீக்கத்திற்கும் முதன்மை காரணமாக அமைந்திருப்பது, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், தங்களது வேலை உத்தரவாதம் குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

