கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மேம்பட்ட கனடா தொழிலாளர் நலத்திட்ட நிதி இந்த வாரம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது. கனடா வருவாய் முகமை ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணப்பலன்களை உயர்த்தி வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான நிதியுதவிகள் இரண்டு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தனிநபர்கள் ஜூலை 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தங்களது புதிய பணப்பலன்களைப் பெறுவார்கள். இதன்படி, குழந்தைகள் இல்லாத தனிநபர்களுக்கான அதிகபட்ச நிதி 1,633 டாலர்களில் இருந்து 1,665 டாலர்களாக உயர்ந்துள்ளது. குடும்பங்களுக்கான அதிகபட்ச நிதி 2,869 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 56 டாலர்கள் அதிகமாகும்.
ஊனமுற்றோருக்கான சிறப்பு நிதியுதவியும் 843 டாலர்களில் இருந்து 860 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு கனடா குடியிருப்பாளராக இருப்பதோடு, 19 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், அந்தந்த மாகாணங்கள் நிர்ணயித்துள்ள வருமான வரம்பிற்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

