கனடா குடியேற்ற அமைச்சகம் குடியேற்ற ஆலோசகர்களுக்கான ஒழுங்குமுறை விதிகளை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15 முதல் அமலுக்கு வருகின்றன. அமைச்சரின் கூற்றுப்படி, விண்ணப்பதாரர்களுக்கு நம்பகமான மற்றும் தரமான ஆலோசனை கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
புதிய விதிகளின் கீழ், ஆலோசகர்களின் கல்லூரிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. விதிகளை மீறுவோருக்கு அதிகப்படியான அபராதம் விதித்தல், விசாரணை நடைமுறைகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் புகார்களைக் கையாளுதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஆலோசகர்களால் நிதி இழப்பைச் சந்திக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தனி நிதியமும் உருவாக்கப்பட உள்ளது.
அண்மையில் ஒன்டாரியோவைச் சேர்ந்த இருவர் சர்வதேச மாணவர்களிடம் கல்விக்கட்டணம் செலுத்துவதாகக் கூறி 1,26,000 டாலர் மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டனர். இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும், குடியேற்ற அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கவும் கனடா அரசு இத்தகு கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

