சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த தினசரி வலியில் இருந்து நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், உலகின் முதல் ‘வாரத்திற்கு ஒருமுறை’ செலுத்தும் பேசல் இன்சுலினை பிரபல நோவோ நார்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘அவிக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய இன்சுலின், வருடத்தில் 365 நாட்கள் செலுத்த வேண்டிய ஊசிகளின் எண்ணிக்கையை வெறும் 52 ஆக குறைக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இதனை பயன்படுத்தலாம். இந்தியாவில் சுமார் 10.1 கோடி மக்கள் சர்க்கரை நோயுடனும், 13.6 கோடி மக்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலும் வாழும் சூழலில், இந்த அறிமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஊசி போடுவதில் இருக்கும் பயம் காரணமாகவே பலர் இன்சுலின் சிகிச்சையை 7 முதல் 9 ஆண்டுகள் வரை தள்ளிப்போடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த ‘அவிக்லி’ இன்சுலின், நீண்ட கால ரத்த சர்க்கரை அளவைக் காட்டும் HbA1c அளவை மிகச் சிறந்த முறையில் குறைக்க உதவுவது மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘ஃபிளெக்ஸ்டச் பென்’ சாதனம் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செலுத்தப்படும் இந்த எளிமையான முறை, நோயாளிகளின் மனரீதியான மற்றும் உடல்ரீதியான சுமையைக் குறைத்து, சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்க உதவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

