கனடாவின் எட்மண்டன் நகரில், ஜூன் 19 அன்று மாரடைப்பால் உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் இயன் சுதாந்தோவுக்கு, ஆம்புலன்ஸ் கட்டணம் அனுப்பப்பட்ட விசித்திரச் சம்பவம் நடந்துள்ளது. ரிவர்பெண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது சக வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் இயன் உடனடியாக அவருக்கு CPR வழங்கி, அங்கிருந்த தானியங்கி இதய அதிர்வு கருவியைப் (AED) பயன்படுத்தி அந்த நபரை மீண்டும் சுவாசிக்க வைத்தார்.
உதவிக்கு வந்த அவசர மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு, தொடர்ந்து CPR செய்ததால் சோர்வடைந்திருந்த மருத்துவர் இயனையும் அங்கேயே பரிசோதித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, இப்பரிசோதனைக்காக 250 டொலர் கட்டணம் செலுத்தக் கோரி அவருக்கு ஆம்புலன்ஸ் கட்டணப் பட்டியல் தபாலில் வந்தது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஆல்பர்ட்டா சுகாதார சேவைத் துறை தலையிட்டு அந்தப் பணத்தைக் கட்ட வேண்டியதில்லை என அறிவித்தது. மேலும், இத்தகைய விசித்திரமான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், மருத்துவரால் காப்பாற்றப்பட்ட நபர் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

