குஜராத்தின் முக்கிய வர்த்தக நகரமான சூரத்தில், நேற்று பெய்த திடீர் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 நிமிடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, நகரத்தின் வணிகப் பகுதிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
குறிப்பாக, மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. இதன் விளைவாக, சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக நாசமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வியாபாரிகளின் பத்து ஆண்டுகால உழைப்பு, இந்த சில நிமிட மழையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
நீரில் மூழ்கிய எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் பழுதுபார்ப்பதற்குக் கூட தகுதியற்ற நிலைக்கு மாறியுள்ளதால், அவற்றை இரும்புக்கடைக்கு விற்பனை செய்யக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத பேரிழப்பால் பல சிறு வணிகர்கள் மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நஷ்டத்தைச் சரிகட்ட அரசு உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வரும் நிலையில், சூரத் நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சேதம் வணிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதனின் உழைப்பு கானல் நீராகப் போனது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது.

