சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது, தன் நண்பர் எட்லா லச்சன்னா என்பவரிடமிருந்து இஸ்மாயில் என்பவர் 120 சவூதி ரியால்களை கடனாகப்பெற்றார். அப்போது அந்த தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 1,000 ஆகும். காலப்போக்கில் இருவரும் தொடர்பை இழந்தாலும், அந்த நன்றிக்கடனை இஸ்மாயில் மறக்கவில்லை.
பல ஆண்டுகள் கழித்து, தனது நண்பரை தேடி இஸ்மாயில் புறப்பட்டார். லச்சன்னா தெலங்கானாவின் ஜக்தியால் மாவட்டத்திலுள்ள தர்மபுரியை சேர்ந்தவர் என்பது மட்டுமே அவருக்கு தெரிந்திருந்தது. அந்த தகவலை கொண்டு தீவிரமாக தேடி, ஜூலை 9 அன்று தனது நண்பரின் குடும்பத்தாரை கண்டுபிடித்தார். தான் வாங்கிய கடனுக்குப் பதிலாக, தற்போதைய மதிப்பு மற்றும் வட்டியை கருத்தில் கொண்டு, அவருக்கு 25,000 ரூபாயை இஸ்மாயில் வழங்கினார்.
வெளிநாட்டில் இருந்த லச்சன்னாவிடம் வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மூலம் இஸ்மாயில் பேசினார். 35 ஆண்டுகளுக்கு பிறகும் தான் கொடுத்த கடனை திருப்பி தந்து, தனது நேர்மையை நிரூபித்த இஸ்மாயிலின் செயலை கண்டு லச்சன்னா வியந்தார். இஸ்மாயிலின் இந்த மனிதாபிமான செயல், காலங்களைக் கடந்த நட்பின் வலிமையையும், மனிதநேயத்தின் மதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

