முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, தனது ‘இந்தியா அன்ட் ஐ’ என்ற புத்தகத்தில் மன்மோகன் சிங் குறித்து பகிர்ந்துள்ள தகவல் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2012-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில், மத்திய அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமரிசித்தனர். இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குலைக்கும் செயலாக இருந்ததால், குரேஷி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இந்த விவகாரத்தை மன்மோகன் சிங்கின் செயலாளர் மூலமாக அவரிடம் கொண்டு சென்றார் குரேஷி. அடுத்த நாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தபோது, தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர்கள் வைத்த விமர்சனங்களை கேட்டு வருத்தமடைந்த மன்மோகன் சிங், “நீங்கள் சொல்வதை போல அவர்கள் நடந்துகொண்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன குரேஷி, தான் அமைச்சர்களை பற்றித்தான் கூறினேன், உங்களை பற்றி அல்ல என்று விளக்கமளித்தார்.
“தேர்தல் ஆணையம் என்பது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மா; அதை நாம் இழந்துவிட்டால் அனைத்தையும் இழந்துவிடுவோம்” என்று மன்மோகன் சிங் அன்றைய தினம் கூறிய வார்த்தைகள் தங்களை நெகிழ வைத்ததாக குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

