மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய மினி பேருந்துகளுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் அடிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தவெக கொடியின் நிறத்தையே இந்த பேருந்துகளுக்குப் பயன்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்சி மாறும்போதெல்லாம் பேருந்துகளின் நிறமும் மாறுவது சுற்றுலா பயணிகளை எந்த அளவுக்கு குழப்பும் என்றும், அரசியல் சார்பற்ற ஒரு பொதுவான நிறத்தை தேர்ந்தெடுத்து அதையே தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், திருச்சி தொழிற்சாலை ஒன்றில் சுமார் 300 மினி பேருந்துகள் இந்த வண்ணத்தில் தயாராகி வருவதாகவும், ஏற்கெனவே MTC பேருந்துகள் பல வண்ணங்களில் இயக்கப்பட்டு வருவதால் இறுதி முடிவு அரசின் கையில்தான் உள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெண்களுக்கான இலவச பேருந்துகளில் இருந்து ‘விடியல்’ என்ற சொல் நீக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே விமர்சனங்களை சந்தித்த தவெக அரசு, தற்போது இந்த மினி பேருந்து நிற விவகாரத்தாலும் சமூக வலைதளங்களில் கடுமையான சலசலப்புக்கு ஆளாகியுள்ளது.

