கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள இன்னிஸ்பில் பகுதியில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனநல பாதிப்பில் இருந்த லியாம் ஹாட்டன் மற்றும் டிலான் ஹாட்டன் ஆகிய சகோதரர்களுக்கு உதவக் கோரி அவர்களது குடும்பத்தினர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த சவுத் சிம்கோ காவல்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் லியாம் ஹாட்டன் உயிரிழந்தார். அவரது சகோதரர் டிலான் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது லியாம் மற்றும் டிலான் ஹாட்டனின் குடும்பத்தினர், சவுத் சிம்கோ மற்றும் ஒன்டாரியோ மாகாண காவல்துறைக்கு எதிராக சுமார் 17.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். காவல்துறையினர் முறையான பேச்சுவார்த்தை மூலம் சூழலைக் கையாளாமல், அதீத பலத்தைப் பயன்படுத்தியதே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று அவர்களது வழக்கறிஞர் ஆஷா ஜேம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினரின் பாதுகாப்பு முக்கியமானது என்றாலும், அவர்கள் இத்தகைய சூழல்களைக் கையாளப் பயிற்சி பெற்றவர்கள் என்றும், லியாம் இன்று உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுப் பிரிவு இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுவித்த போதிலும், குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. டிலான் ஹாட்டன் மீது சுமத்தப்பட்டிருந்த தாக்குதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகள் 2025 அக்டோபரில் கைவிடப்பட்டன. காவல்துறையினரின் உடல் காமிரா பதிவுகளும், அவர்களது அறிக்கைகளும் முரண்படுவதாக டிலானின் வழக்கறிஞர் ஆடம் வெய்ஸ்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அமைப்புகள் இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

