ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் நயன்தாரா. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியதோடு நம்பர் ஒன் நடிகராகவும் அவர் மாறினார். இவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமும் கொடுக்கப்பட்டது.
ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமால் நிறைய தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நயன்தாரா நடித்தார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் அவர் தாயாக மாறினார். ஒருபக்கம் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்வது மற்றும் சொத்துக்களை வாங்குவதில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். ஏற்கனவே பல வியாபாரங்களில் அவர் முதலீடு செய்திருக்கும் நிலையில், ஒருபக்கம் சென்னை போயஸ்கார்டனில் அவர் ஒரு புதிய வீட்டை கட்டிவந்தார்.
இந்நிலையில்தான், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. 5 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாக இந்த வீடு உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதில் மேல் இரண்டு தளங்களில் நயன்தாரா குடும்பத்தோடு வசிக்கப் போகிறாராம். விரைவில் அந்த வீட்டுக்கு நயன்தார குடியேற திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கனவே நடிகர் தனுஷ் போயஸ்கார்டனில் ரூ.150 கோடி செலவில் வீடுகட்டி அங்கு குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

