கனடாவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மர்மக் கொலை வழக்கு ஒன்று தற்போது நவீன DNA தொழில்நுட்பத்தின் உதவியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 1905-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்து 1913-இல் கனடாவிற்கு இடம்பெயர்ந்த மேரி மெக்லியோட் மாஃபாட் என்பவர், 1936-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது எலும்பிலிருந்து பெறப்பட்ட தூய்மையான மரபணு மாதிரிகள் மூலம் மேரியின் அடையாளம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், மேரியின் கணவரான ஆண்ட்ரூ லாயிட் மாஃபாட் என்பவரே இந்தக் கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது. தனது முதல் மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து தொராண்டோவில் வாழ்ந்து வந்த ஆண்ட்ரூ, உண்மை தெரிந்த மேரியைக் கொன்றுவிட்டு போலி அடையாளத்துடன் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அவர் 1985-ஆம் ஆண்டு உயிரிழக்கும் வரை நான்கு பெண்களைத் திருமணம் செய்து தலைமறைவாக வாழ்ந்துள்ளார்.
மற்றொரு வழக்கில், 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று கனடாவின் நெடுஞ்சாலை 401-இல் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்ட கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சடலம் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அந்தப் பெண்ணின் அடையாளம் பல ஆண்டுகளாகத் தெரியாமல் இருந்தது. காரை ஓட்டிய சியுமி கில்ஃபு என்பவர் தண்டனை பெற்று நாடு கடத்தப்பட்ட நிலையிலும், உயிரிழந்தவர் யார் என்பதைக் கூறவில்லை. தற்போது IGG தொழில்நுட்பத்தின் மூலம் அவர் மணிடோபாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான பேட்ஸி புளோரா லாகார்ட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத இந்த இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது நீதி கிடைத்துள்ளது.

