கீது மோகன்தாஸ் இயக்கத்தில், முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. இத்திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வரும் 26-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை நயன்தாரா, தான் வழக்கமாக படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து மனம் திறந்து பேசினார். பொதுவாக படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தனக்குச் சரியாக வராது என்பதால் தான் அது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதாகக் கூறினார்.
இருப்பினும், ‘டாக்ஸிக்’ திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும், படத்தின் நாயகன் யஷ் விடுத்த ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே இந்த நிகழ்விற்கு தான் வரவழைக்க காரணமாக அமைந்தது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
யஷுடனான நட்பும் மரியாதையுமே தன்னை இந்த மேடைக்கு அழைத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட நயன்தாராவின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. நயன்தாரா மற்றும் யஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

