மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் பியோரா பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி, இணையத்தில் ‘பிட்டு தபாஹி’ என்ற பெயரில் பிரபலமானவர். தனது பகுதியில் குப்பைகளால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அஜ்னார் நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் தனியாக களத்தில் இறங்கியுள்ளார்.
ஆற்றில் குவிந்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், பாசிகள் உள்ளிட்ட கழிவுகளை தொடர்ந்து அகற்றி வந்த அவர், பல மாதங்களாக மேற்கொண்ட முயற்சியின் மூலம் நதியை கணிசமாக தூய்மைப்படுத்தியுள்ளார். இந்தப் பணிக்காக தனது சொந்த பணத்தில் சுமார் ரூ.30,000 வரை செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
சுரேந்திரின் பணியை வெளிப்படுத்தும் வகையில், அஜ்னார் நதியின் ‘Before மற்றும் After’ புகைப்படங்களை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு, கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நெதர்லாந்து நாட்டின் ‘The Ocean Cleanup’ அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி போயன் ஸ்லாட்டின் கவனத்தை ஈர்த்தது.
சுரேந்திரின் முயற்சியை பாராட்டிய போயன் ஸ்லாட், தங்களது நிறுவனத்தில் வந்து பணியாற்றுமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த இளைஞரின் சேவை தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் சுரேந்திரின் பணியை பாராட்டியிருந்தார். சமூக வலைதள புகழுக்காக அவர் இதை செய்வதாக விமர்சனங்கள் எழுந்தபோதும், நல்ல காரியத்துக்கு அந்த புகழ் உதவினால் அதுவும் வரவேற்கத்தக்கதே என அவர் தெரிவித்திருந்தார். ஒரு சிறிய இடத்தில் தொடங்கிய முயற்சி, இப்போது உலகளவில் கவனம் பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

