அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அந்நாட்டு மத்திய படைகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய அமைச்சர், “கனடா மினசோட்டா அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் நிகழும் உள்நாட்டு விவகாரங்களுக்குத் தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், கனடாவின் தனித்துவமான செயல்பாடுகளை வலியுறுத்தினார்.
கனடாவில் குடியேற்ற விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து அவர் விரிவாக விளக்கினார். குடியேற்ற நடவடிக்கைகளின் போது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்குக் கனடா உரிய மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 22,000 பேர் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது சில சவாலான சூழல்கள் நிலவினாலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொடர்பான ஒத்துழைப்புகள் தொடர்ந்து வலுவாகவே நீடிப்பதாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

