இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ராணுவ தளபதியே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்று கூறி அந்த புத்தகத்தை காண்பித்தார். இது நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய கேள்விகளை எழுப்புவதாக அவர் வாதிட்டார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்தப் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும், அது நம்பகத்தன்மையற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆதாரமற்ற தகவல்களைப் பேசுவதன் மூலம் ராகுல் காந்தி இந்திய ராணுவத்தின் கௌரவத்தை அவமதித்துவிட்டதாக கடுமையாக சாடினார்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக களமிறங்கிய பிரியங்கா காந்தி, “ராகுல் காந்தி ராணுவத்தை அவமதிக்கவில்லை. அவர் முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியைத்தான் வாசித்து காண்பித்தார். பாஜக மறைக்க விரும்பும் உண்மைகள் வெளிவரும்போதெல்லாம், இப்படி பொய் புகார்களை கூறி திசைதிருப்புவது அவர்களின் வழக்கம்,” என்று பதிலடி கொடுத்தார்.

