நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ‘திமுக தனது அரசியல் எதிரி.. பாஜக தனது கொள்கை எதிரி’ என சொல்லி வருகிறார். மேலும் அதிமுகவை பற்றி பேசும்போது அடிமை ஊழல் கட்சி என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் தொடர்ந்து சொல்லி வருகிறார். இது அதிமுகவுக்கும், அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜகவுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. எனவே அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை.. முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரணும்.. அதுவும் திரிஷாவை விட்டு அவர் வெளியே வரவேண்டும்.. குடும்பஸ்தனாக இருந்த அரசியல் செய்து நான்கு பெரிய தலைவர்கள் சொன்னதை பேசினால்தான் அவருக்கு அரசியல் தெரியும்’ என்று பேசினார். விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதுவும் ஒரு ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி அவரை நயினார் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.. அதோடு, இதற்கு கண்டனம் தெரிவித்து திரிஷா சார்பிலும் இன்று ஒரு அறிக்கை வெளியானது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன் ‘என்னுடைய அரசியல் வாழ்க்கையை பொருத்தவரையில் எந்த தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதித்தது இல்லை.. பேசியதும் இல்லை.. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை.. உண்மையில் இதனால் யாரேனும் வருத்தப்படுவார்கள் என்றால் மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறியிருக்கிறார்.

