இந்தியர்கள் எல்லா வெளிநாடுகளிலும் வசிக்கிறார்கள். பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று சில வருடங்களில் அங்கேயே ஒரு தொழிலை தொடங்கி குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆனவர்கள் பலர். பல வருடங்கள் அப்படி அந்த நாடுகளில் வாழ்பவர்களை விதிமுறைகளை காட்டி திடீரென வெளியேற சொன்னால் அவர்களின் நிலை பரிதாபம்தான்.
ஏற்கனவே அமெரிக்காவில் வசிக்கும் மற்ற நாட்டினை சேர்ந்தவர்களை வெளியேற்றுவேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கூட சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிவர்கள் பலரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில்தான், ஜப்பானில் 18 வருடங்களாக உணவகம் நடத்தி வரும் மனிஷ் குமார் இதே பிரச்சினையை சந்தித்திருக்கிறார். இந்தியாவை சேர்ந்த மணிஷ் குமார் 18 வருடங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஒரு உணவகத்தை துவங்கி அதை சிறப்பாக நடத்தியும் வந்திருக்கிறார்.
ஆனால் மணிஷ் குமாரின் விசாவை கடுமையான குடியேற்ற விதிகளால் புதுப்பிக்க மறுத்த ஜப்பான் அரசு அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மணீஷ்குமார் ‘ஜப்பானில் பிறந்து வளர்ந்த என் பிள்ளைகளுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும்.. ஆனால் எங்களை இந்தியாவிற்கு திரும்பிச்செல்லுமாறு அரசு சொல்லிவிட்டது. நாங்கள் என்ன செய்வது?’ என கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.. ஜப்பான் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இங்கேயே தங்க எங்களை அனுமதிக்க வேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

