விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே, பதிவுத்துறை வரலாற்றில் முதல்முறையாக முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சார்பதிவாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தவெக அரசின் நேர்மைக்கும், புதிய நிர்வாக வழிகாட்டுதலுக்கும் சான்றாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் சுமார் 215 சார்பதிவாளர்களுக்கு எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, தகுதி மற்றும் நியாயமான அடிப்படையில் பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த வெளிப்படையான கொள்கையை வரவேற்றுள்ள சார்பதிவாளர் சங்கம், இதேபோன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தங்களின் சம்பள நிலுவைத் தொகை, பணியிடை நீக்க விவகாரங்கள் மற்றும் தகுதியானவர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் புதிய அரசு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மறுபுறம், புதிய அரசு வந்தவுடன் அதிகாரிகளுக்கு நேர்மையான முறையில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது போல, பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும் எவ்வித லஞ்சமும் இன்றி நேர்மையான மற்றும் சுமுகமான சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

