இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பை உலக தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அமைச்சரவை “மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு” ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.62,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்வதற்கு தகுதியான விற்பனையின் அடிப்படையில் 2.25% முதல் 5% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக 1.5% வரை ஊக்கத்தொகையும், இந்திய பிராண்டுகளின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேம்படுத்த கூடுதலாக 3% ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் ஏறத்தாழ 60,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி மொபைல் உற்பத்தி மையமாக விளங்கும் தமிழ்நாடு, இத்திட்டத்தின் மூலம் மிக முக்கிய மற்றும் அதிக பயனடையும் மாநிலமாகத் திகழப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

