திமுக மேலிடத்தால் முற்றிலும் கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தற்போது மாற்றுக்கட்சிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அழகிரியின் மகள் கயல்விழி தவெகவின் பக்கம் தன் பார்வையை திருப்பினார். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதுடன், தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். இதனால் அவர் விரைவில் தவெகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், கட்சியில் சேருவதற்கு முன்பாக தனக்கு மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி வேண்டும் என்ற பெரிய டிமாண்டை கயல்விழி முன்வைத்தது தவெக தலைமையை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுக குடும்பத்தின் வாரிசு கட்சியில் இணைவது பிரகாசமாக இருக்கும் என ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், இப்படி பதவி கேட்டு நிபந்தனை விதிப்பதை விஜய் விரும்பவில்லை. இந்த விவகாரம் உடனடியாக முதல்வர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நீண்ட காலமாகத் கட்சிக்காக உழைத்து வியர்வை சிந்திய உண்மையான தொண்டர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுமே தவிர, பதவிக்காக வருபவர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் தர முடியாது என்று விஜய் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் கயல்விழியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பாதியிலேயே முடங்கியதுடன், அழகிரி தரப்பினரும் இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

