விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் புதிய வடிவிலான நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்கள் நேரடியாக பிக் பாஸின் 10வது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘பிக் பாஸ் – காமன் மேன்’ நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
அதோடு, ஓவியா, ராஜு, ஆரி போன்ற முன்னாள் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வார வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள். இந்த அறிவிப்பு விஜய் டிவி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

