ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. அதன்பின் பல நாட்கள் போர் நடைபெற்றது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்தநாட்டுக்கு ராணுவ தளங்கள் அமைக்க இடம் கொடுத்த துபாய், சவுதி, அபுதாபி, பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.அதோடு, கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இது அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியை கொடுத்தது. ஈரான் ஹார்மூஸ் நீரிணையை திறக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தார். ஒருகட்டத்தில் ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலும் நடத்தியது. தற்போது ஹார்மூஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் சொல்லி வருகிறார்.
ஒருபக்கம் அமெரிக்காவும், ஈரானும் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என ஐ.நா கேட்டுக்கொண்டது. அந்த கெடு முடிவைடையும் நிலையில் 2 நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு பதற்றத்தை குறைக்கும் வகையில் அமைதியான தீர்வை எட்டுமாறு ஐ.நா.பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.

