விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 9, தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் ரம்யா ஜோ மற்றும் வியானா என இருவர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒரு அதிரடி மாற்றத்தை பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
தற்போது வீட்டில் நேரத்தை கணிக்கும் ‘டைம் டாஸ்க்’ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணியினருக்கு அடுத்த வார கேப்டன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதைவிட முக்கியமான ஒரு மெகா சலுகையை பிக் பாஸ் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வழக்கமாக, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ போது, உறவினர்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக, இந்த வார போட்டியில் சிறப்பாக செயல்படும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர், 24 மணி நேரம் பிக் பாஸ் வீட்டிலேயே தங்கி இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த போட்டியாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஒரு முழு நாளை கழிக்க வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

