காட்டுப் பாதை வழியாகச் சென்ற ஒருவர், துப்பாக்கிக் காயங்களுடன் காணப்பட்ட நபர் ஒருவரைக் கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு முடக்கம் அறிவிக்கப்பட்டது. ‘UTSC கட்டடங்களில் இருப்பவர்கள் அங்கேயே தங்கியிருக்குமாறும், வெளியில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும்’ பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பின்னர், மாலை 6 மணியளவில் பொலிஸாரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு முடக்கம் நீக்கப்பட்டது. ரொரன்ரோ பொலிஸாரின் கொலை பாதகப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் வயது வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அல்லது சந்தேக நபர் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

