சாதாரணமாக ஒரு உணவகத்தில் பருப்பு, சாதம், சப்பாத்தி, காய்கறி மற்றும் ஊறுகாய் அடங்கிய ஒரு முழுமையான உணவை சாப்பிட ரூ. 100 முதல் ரூ.500 வரை செலவாகும். ஆனால், தினசரி இருவேளை உணவிற்கே கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு, இதே போன்ற தரமான உணவு வெறும் 5 ரூபாய்க்கு கிடைத்தால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்? டெல்லி அரசு இன்று ‘அடல் கேண்டீன்’ திட்டத்தை தொடங்கி, நகரின் 100 இடங்களில் வெறும் 5 ரூபாய்க்கு சத்தான உணவை வழங்க முன்வந்துள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த 100 அடல் கேண்டீன்களை திறந்து வைத்தார். ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கண்ணியமான முறையில் உணவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். “அடல் கேண்டீன் டெல்லியின் ஆன்மாவாக மாறும்; இங்கு இனி யாரும் பசியோடு உறங்க செல்ல வேண்டியதில்லை,” என்று முதல்வர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
டெல்லியின் ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ், ரஜோரி கார்டன், நரேலா, பவானா உள்ளிட்ட 45 இடங்களில் முதற்கட்டமாக இந்த உணவகங்கள் இன்று செயல்பட தொடங்கியுள்ளன. மீதமுள்ள 55 கேண்டீன்கள் வரும் நாட்களில் திறக்கப்படும். மதிய உணவு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு உணவு மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் சுமார் 500 பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர டெல்லி அரசு டிஜிட்டல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய காகித கூப்பன்களுக்கு பதிலாக இந்த டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படும். மேலும், டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் டிஜிட்டல் தளம் மூலம், அனைத்து மையங்களும் சிசிடிவி கேமராக்கள் வாயிலாக நேரலையில் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

