தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா, இந்திய சுற்றுப்பயணத்தின் போது மைதானத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுமாவின் உருவத்தை கேலி செய்யும் விதமாக ‘பவுனா’ என்று அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், போட்டி முடிந்த பிறகு பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் நேரில் வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பவுமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பவுமா, “அவர்கள் தங்களின் மொழியில் என்னை பற்றி ஏதோ பேசியது எனக்கு தெரியும். ஆனால், பும்ராவும் ரிஷப் பந்தும் கண்ணியமான முறையில் என்னிடம் வந்து மன்னிப்பு கோரியது நெகிழ்ச்சியாக இருந்தது. மைதானத்தில் நடக்கும் மோதல்கள் அங்கேயே முடிந்துவிட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணியினரை இழிவுபடுத்தும் வகையில் ‘மண்டியிடச் செய்தோம்’ என்று பயன்படுத்திய வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இத்தகைய சர்ச்சைகள் வீரர்களுக்கிடையிலான வன்மத்தை வளர்க்காமல், ஒரு உத்வேகமாக மட்டுமே இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

