பிரம்டனில் பேருந்துப் பயணி ஒருவரை போலித் துப்பாக்கியொன்றைக் கொண்டு அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 27ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சிங்குவாக்கசி வீதி மற்றும் டிரிங்க்வோட்டர் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்திலிருந்து இறங்கிய பாதிக்கப்பட்ட நபரை சந்தேகநபர் பின்தொடர்ந்து சென்று, தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சற்றுத் தொலைவில் சந்தேகநபரைக் கண்டுபிடித்தனர்.
காவல்துறையினருடனான உரையாடலின்போது, சந்தேகநபர் தன்னிடம் இருந்த போலித் துப்பாக்கியை அருகிலிருந்த பனிக்குவியல் ஒன்றில் வீசியெறிந்துள்ளார். மேலும், அவரிடமிருந்த பையில் கயிறுப் பொதிகள், பலவிதமான டேப் சுருள்கள், கையுறைகள் மற்றும் இரண்டு கத்திகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரம்டனைச் சேர்ந்த 20 வயதான ஜக்தீப் சிங் என்பவர் அபாயகரமான நோக்கத்திற்காக ஆயுதத்தை வைத்திருந்தமை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் பிணை விசாரணக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பீல் பிராந்திய காவல்துறையினரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

