கனடா தனது குடியேற்ற அமைப்பில் 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. நாட்டின் தற்காலிக வதிவிடவாசிகளின் எண்ணிக்கையை “பேண்தகு மட்டங்களுக்கு” கொண்டுவரும் நோக்கில் இந்தக் கொள்கைகள் கடுமையாக்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் சர்வதேச மாணவர்கள் மற்றும் கனேடிய குடியுரிமையைப் பெற விரும்பும் சில நபர்களைப் பாதிக்கும். முதலாவதாக, சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படவுள்ளது.
முன்னர் 2026 ஆம் ஆண்டில் 305,900 அனுமதிப் பத்திரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், புதிய திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை 155,000 ஆகக் குறைக்கப்படும். இது கனடாவில் கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு சவாலாக அமையும்.
இரண்டாவதாக, கனடாவின் சுகாதாரத் துறையில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச மருத்துவர்களுக்கான நிரந்தர வதிவிடப் பாதை எளிதாக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட கனேடிய பணி அனுபவம் உள்ள சர்வதேச மருத்துவர்களுக்காக ஒரு புதிய ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ வகை உருவாக்கப்படும். இந்த புதிய வகைக்கான விண்ணப்ப அழைப்புகள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும்.
இறுதியாக, ‘பில் சி-3’ எனப்படும் குடியுரிமைச் சட்டத் திருத்தம், முதல் தலைமுறைக்கு அப்பால் வம்சாவளி மூலம் கனேடிய குடியுரிமையை நீட்டிக்கிறது.
இதன்படி, வெளிநாட்டில் பிறந்த கனேடிய பெற்றோர், தங்கள் குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுப்பதற்கு முன்னர் கனடாவில் குறைந்தது 1,095 நாட்கள் வசித்திருந்தால், வெளிநாட்டில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கு குடியுரிமையை வழங்க முடியும். இந்த விதி டிசம்பர் 15, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் அல்லது தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்குப் பொருந்தும்.

