கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம், கடுமையான குற்றவியல் கொள்கைகளை மையமாகக் கொண்டு மூன்று புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சட்டமூலங்கள் பிணை பெறுவதை கடினமாக்குதல், கட்டாய குறைந்தபட்ச மற்றும் தொடர்ச்சியான தண்டனைகளை விதித்தல், அச்சுறுத்தல், வெறுப்பைத் தூண்டுதல் தொடர்பான புதிய குற்றங்களை உருவாக்குதல் போன்ற பல குற்றவியல் சட்டத் திருத்தங்களை உள்ளடக்கியுள்ளன.
இந்தக் கடுமையான அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் சீன் பிரேசர், இது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் ஒரு நடவடிக்கை என்று கூறினார்.
“கார் திருட்டு, வீட்டு ஆக்கிரமிப்பு, பாலியல் குற்றங்கள், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற விடயங்களில் கனடியர்கள் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களின் உண்மையான கவலைகளுக்கு பதிலளிக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலங்களில், வெறுப்புக் குற்றங்களை இலக்காகக் கொண்ட C-9, பிணை விதிகளை கடுமையாக்கும் C-14, மற்றும் பெண்கொலை, வற்புறுத்தல் கட்டுப்பாடு, டீப்ஃபேக் படங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய C-16 ஆகியவை அடங்கும். எனினும், இந்த சட்டமூலங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், அமைதியான போராட்டங்களைக் குற்றமாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
ரொரன்ரோ பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் கென்ட் ரோச், இவை தனது 35 வருட தொழில் வாழ்க்கையில் கண்ட மிக முக்கியமான குற்றவியல் நீதி மாற்றங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். குறிப்பாக, C-9 சட்டமூலத்திற்கு பிளாக் கியூபெக்வா கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக, வெறுப்புப் பேச்சுக்கான மத விலக்கை நீக்க லிபரல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது, இது பழமைவாதக் கட்சியினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

