வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை நண்பகல் அளவில் இலங்கையில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த மண்டலம், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதன் தாக்கத்தால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

