கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்ராறியோவில் வீட்டு விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டிலும் இந்த சரிவு தொடரும் என சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, வீடு வாங்குவோர் அவசரப்படாமல் பொறுத்திருக்குமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரொரன்ரோ பிராந்திய நில அளவைச் சபையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் பெரும் ரொரன்ரோ பகுதியில் வீட்டு விலைகள் 6.4 சதவீதம் குறைந்துள்ளன. புதிய வீடுகளின் விற்பனையும் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த வீட்டுக் கடன் தரகர் ரொப் பட்லர், “ஒன்ராறியோவில் நிலைமை இன்னும் மோசமடையும் என்பது மட்டும் நிச்சயம்,” என்று கூறியுள்ளார். வேலையின்மை அதிகரிப்பு, சர்வதேச மாணவர்களின் வருகைக் குறைவு மற்றும் வரவிருக்கும் வீட்டுக் கடன் புதுப்பித்தல்கள் போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படும் என அவர் குறிப்பிடுகிறார்.
கனடா வங்கியின் அறிக்கையின்படி, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் கனடாவில் சுமார் 60 சதவீத வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள் அதிக மாதாந்த கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும். 2021இல் சுமார் 1.47 சதவீதமாக இருந்த வட்டி விகிதங்கள், இப்போது சுமார் நான்கு சதவீதமாக உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம்.
பிரபல நில அளவை நிறுவனமான Royal LePage, 2026இல் ரொரன்ரோவில் வீட்டு விலைகள் 4.5 சதவீதம் குறையும் என்று கணித்துள்ளது. ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் விக்டர் கோச்சர், வீடுகளை ஒரு முதலீடாகக் கருதுவதை விட, வாழ்வதற்கான இடமாகப் பார்க்க வேண்டும் என்கிறார். நீண்ட காலத்திற்கு வீட்டில் வசிக்கத் திட்டமிடுபவர்களுக்கு இது வீடு வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அனைத்து நிபுணர்களும் இந்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. Desjardins நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் காரி நோர்மன், 2026இல் ஒன்ராறியோவின் வீட்டுச் சந்தை ஸ்திரமடைந்து படிப்படியாக அதிகரிக்கும் என நம்புகிறார்.

