சினிமாவில் ஒரு இயக்குனர் ஒரு வெற்றிப்படம் கொடுத்தால், அதுவும் விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்துவிட்டால் அவர் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடுவார். அவருக்கு பல கோடி சம்பளமும் கிடைக்கும். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அந்த இயக்குனர் பட்ட கஷ்டங்கள் பற்றி யாருக்கும் தெரியாது.
சினிமாவில் இயக்குனராக வெற்றி பெறுவதற்கு முன் பல இயக்குனர்கள் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே அதை வெளிப்படையாக சொல்வார்கள். இந்நிலையில்தான், ஹெச்.வினோத் கூறியுள்ள செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நான் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ டித்துவிட்டு டிரான்ஸ்பார்மருக்கு பியூஸ் தயார் பண்ணும் கம்பெனியில் சில மாதங்கள் வேலை செய்தேன்.. அதன்பின் ஜெனரேட்டர் சர்வீஸ் பண்ணும் வேலையும் செய்துள்ளேன். கோயம்பேட்டில் சில மாதங்கள் எலக்ட்ரீசியனாக வேலை செய்திருக்கிறேன்.. ஒரு டீக்கடையில் கூட நான் வேலை பார்த்திருக்கிறேன்’ என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் எச். வினோத். அதன்பின் இயக்குனர் பார்த்திபனிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா இயக்குவதி அவர் கற்றுக்கொண்டார்.
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களம் இறங்கிய வினோத் அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியதால் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்துக்கு கொடுத்தார் விஜய். அப்படி உருவான திரைப்படம்தான் ஜனநாயகன். ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்த படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

