தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25, விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குச் சேர்த்து 24 இடங்கள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 6, பாமக இணைந்தால் அதற்கு 10, தேமுதிகவுக்கு 6 மற்றும் சிறு கட்சிகளுக்கு 10 இடங்கள் என பகிர்ந்தளிக்கப்பட்டால், திமுக நேரடியாக போட்டியிட சுமார் 150 இடங்கள் மட்டுமே எஞ்சும்.
தமிழகச் சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. திமுக 150 இடங்களில் மட்டும் போட்டியிட்டால், அதில் 118 இடங்களை வெல்வது என்பது மிகக்கடினமான சவாலாகும். கூடுதல் கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்போது, திமுக தனது சொந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. இது ஒருபுறம் “ஆட்சி இழப்பு” என்ற அபாயத்தையும், மறுபுறம் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்க்கும் “கூட்டணி ஆட்சி” என்ற நெருக்கடியையும் உருவாக்குகிறது.
கடந்த காலங்களில் தனித்து ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருந்த திமுக, இம்முறை வலுவான எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இந்தச் சிக்கலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதே அரசியல் வட்டாரத்தின் பெரும் கேள்வியாக உள்ளது. ஒன்று, தனது பிடியை இறுக்கி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், அல்லது கூட்டணி ஆட்சிக்குச் சம்மதித்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

