இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த ஜனவரி 23 அன்று வெளியான நிலையில், அதே நாளில் அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மங்காத்தா’ 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் திரையரங்குகளில் ‘மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் கூட்டத்தால், தனது ‘திரௌபதி 2’ படத்திற்கான ஓப்பனிங் மற்றும் கவனம் சிதைந்துவிட்டதாக மோகன் ஜி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு..
மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை..
இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்..
என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G..

