அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை வாரி இறைத்தது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அது மட்டுமல்ல அஜித்துக்கு அது ஐம்பதாவது படமாகவும் அமைந்தது தான் மேலும் ஒரு சிறப்பம்சம். அஜித் கெரியரில் அது ஒரு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்திருந்தது. இன்றளவும் அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் மங்காத்தா திரைப்படம் எப்பொழுதுமே முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் தான். இந்த படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் எப்படி அந்தப் படத்தை பார்த்து ரசித்தார்களோ அதே மாதிரியான வரவேற்பை ரீ ரிலீசிலும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
திரையரங்குகளில் அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் மேள தாளங்கள் அடித்தும் ஒரு புது படம் வெளியானால் எப்படி கொண்டாடுவார்களோ அதே மாதிரியான ஒரு எனர்ஜியுடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து மகிழ்கின்றனர். அஜித்தின் எந்த ஒரு புதிய படம் வெளியானாலும் அதன் முதல் நாள் காட்சியை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ஓடி போய் பார்த்து விடுவார்.
அப்படித்தான் மங்காத்தா திரைப்படத்தின் ரீ ரிலீஸையும் தியேட்டரில் பார்த்து ரசித்திருக்கிறார். விசில் அடித்தும் ஆரவாரம் செய்தும் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணியிருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆதிக் ரவிச்சந்திரன் இடம் பத்திரிக்கையாளர்கள் அஜித்தின் 64 வது படத்தை பற்றி சில கேள்விகளை கேட்டனர். எந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று கேட்டபோது குட் பேட் அக்லி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அது ரசிகர்களுக்கான படமாக இருந்தது.
அடுத்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். குட் பேட் அக்லியில் அஜித்தின் எல்லா கெட்டப்புகளையும் காட்டினீர்கள். அதேபோல அடுத்த படத்தில் எந்த மாதிரி அவருடைய கெட்டப் இருக்கும்? சால்ட் அண்ட் பெப்பர் லுக் இருக்குமா என்று கேட்டபோது அதுதான் ஒரு பெரிய சர்ப்ரைஸ். படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தா என்று கேட்டபோது இப்போது நான் அதை சொல்ல முடியாது. படத்தைப் பற்றிய ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போது உங்களுக்கு அது தெரிய வரும் என கூறியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

