இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தொடரின் நான்காவது போட்டியில், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் டிம் செய்பிர்ட் இணைந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் சேர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நியூசிலாந்து நிர்ணயித்தது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது. இருப்பினும், ஷிவம் துபே மட்டும் ஓரளவுக்கு நிலைத்து நின்று விளையாடி 65 ரன்கள் எடுத்தார். அவர் ரன் அவுட் ஆன பிறகு இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இறுதியில் 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

