மத்திய பட்ஜெட் 2026-27 பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு, குறிப்பாக ‘ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ பிரிவில் ஈடுபடுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பங்குச்சந்தையில் நிலவும் அதீத ஊக வணிகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கான வரி 0.02%-லிருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%-லிருந்து 0.15% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு குறுகிய கால வர்த்தகர்கள் மற்றும் தரகர்களின் லாபத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தினமே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், தினசரி வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேசமயம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒரு நேர்மறையான அம்சமாக பார்க்கப்படுகிறது.

