கனடாவின் எட்மண்டன் நகரைச் சேர்ந்த டே சியோங் லீ என்பவர், கடந்த அக்டோபர் 7, 2025 அன்று நடைபெற்ற லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் 15 மில்லியன் டாலர் ஜாக்பாட் வென்று பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார். எட்மண்டனில் உள்ள 3003 கால்கரி டிரெயிலில் அமைந்துள்ள பெட்ரோ கனடா எரிபொருள் நிலையத்தில் தாம் வாங்கிய டிக்கெட்டைச் சரிபார்த்தபோது, திரையில் தோன்றிய முடிவைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த லீ, “இந்த நாளுக்காக நான் நீண்ட காலம் கனவு கண்டேன். ஆனால் முதலில் என்னால் நம்ப முடியவில்லை, எனவே மீண்டும் ஒருமுறை சீட்டைச் சரிபார்த்தேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த வெற்றியைத் தனது மனைவி மற்றும் மகளிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்கள் அனைவரும் இணைந்து இந்தத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் திட்டமிட்டு வருகின்றனர்.
வெற்றித் தொகையின் மூலம் முதலாவதாகத் தனது வீட்டு அடமானக் கடனை அடைக்கப் போவதாகவும், பின்னர் ஒரு பெரிய சொகுசு வாகனம் அல்லது புதிய டிரக் ஒன்றை வாங்கப்போவதாகவும் லீ குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகப் பணி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக, பல ஆண்டுகளாகத் தனது தாயைச் சந்திக்க இயலாமல் இருந்த லீ, தற்போது தென்கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டு தனது தாயைக் காண ஆவலாக உள்ளதாகக் கூறியுள்ளார். 5, 6, 16, 26, 29, 37 மற்றும் 44 ஆகிய எண்களே இவருக்கு இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன. சக ஊழியர்களைப் போலவே தாமும் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில், இந்த வெற்றி தமக்குக் கனவு போலத் தோன்றுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

