சென்னையில் அடையார், காந்திநகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட சில பகுதிகளில் 500 மேற்பட்ட காக்கைகள் தொடர்ந்து உயிரிழந்தது. இறந்த காக்கைகளின் மாதிரிகளை எடுத்து நோய் தடுப்பு புலனாய்வு குழுவினர் சோதனை செய்தனர். அதில், அந்த காகங்கள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி தலைமைச் செயலருக்கு மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியிருக்கிறது.. இதையடுத்து பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடைத்துறை வழங்கியிருக்கிறது.
உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது.. உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசுமாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும். கோழி பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது. ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழக எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவரப்படுத்துமாறும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

