மகளிர் பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கோவாவில் ஒரு வாரம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களம் காண தயாராக உள்ளது. இது குறித்து பேசிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தொடர்ச்சியான போட்டிகளுக்கு பிறகு இந்த ஓய்வு வீரர்களுக்கு தேவையான மன அமைதியை தந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனவரி 29-க்கு பிறகு விளையாடாத ஆர்சிபி வீரர்கள், கோவாவின் கடற்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர். “தொடர்ச்சியாக ஹோட்டல் அறைகளில் அமர்ந்து கிரிக்கெட் பற்றியே சிந்திப்பது மன அழுத்தத்தை தரும்; இந்த இடைவெளி எங்களை மீண்டும் ஒருமுகப்படுத்த உதவியது” என மந்தனா கூறினார்.
கோவாவில் ஓய்வெடுத்த பிறகு பிப்ரவரி 2 முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள் கோப்பையை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்சிபி முனைப்பு காட்டி வருகிறது. வதோதராவின் கோடாம்பி மைதானத்தில் இந்த பரபரப்பான இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

