தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் சேலம் பிரசாரக் கூட்டத்திற்கு, மாநகரக் காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகிலுள்ள தாளமுத்து நடராஜன் திடலில் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 5,000 பேருக்கு மேல் பங்கேற்க மாட்டார்கள் எனத் தவெக நிர்வாகிகள் அளித்த உறுதியின் அடிப்படையில் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
காவல் துறையின் நிபந்தனைப்படி, பிப். 13 அன்று பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக அளிக்கப்பட்ட மனுக்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்தச் சேலம் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

