டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் சற்று சவாலாகவே இருந்தது. அமெரிக்க பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி, இந்திய அணியை 118 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளினர்.
இருப்பினும், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடிய அவர் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் பலனாக இந்தியா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அமெரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று சென்னையில் நடைபெறும் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

