இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழருக்கு கண்ணியமான, தீர்வு வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால், இந்திய குடியுரிமை பெறலாம் அல்லது இலங்கை குடியுரிமையை தக்க வைத்து, பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்பும் சூழல் உருவாகும் வரை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வாழலாம். இத்தகைய தெளிவான நிலைபாட்டை இந்திய மத்திய, தமிழக மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இம்மக்கள் 1980களிலிருந்து பல தசாப்தங்களாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். முதியோரை தாண்டி, இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், இந்திய பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர்கள், இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு, நாட்டின் சமூக-பொருளாதார அமைப்பில் முழுமையாக இணைந்துள்ள இளைய தலைமுறை, விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த நீண்டகால பிரச்சினை, மனிதாபிமான அடிப்படையில் அணுக பட வேண்டும். அதே நேரத்தில், இந்திய குடியுரிமையை விரும்பாதவர்களுக்கு எந்த அழுத்தமும் இன்றி தங்கள் விருப்பை தெரிவு செய்ய முழு சுதந்திரம் வழங்க பட வேண்டும்.
மேலும், முகாம்களில் வசிப்பவர்களை தவிர, 1970கள் முதல் இலங்கையிலிருந்து, இடம்பெயர்ந்து, தற்போது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் வாழும் இன்னொரு கணிசமான பிரிவினரும் உள்ளனர். இவர்கள் இந்திய சமூகத்தில், பொருளாதார, சமூக ரீதியாக முழுமையாக இணைந்து வாழ்கின்றனர். பலர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்றியே வாழ்கின்றனர்.
இது தொடர்பில், தெளிவான கொள்கை இல்லாததால், அதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலங்கை கடவுசீட்டை வைத்திருக்கவும் அச்சபடுகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில் தடைகள் ஏற்பட்டு, உறுதியற்ற சூழலில் வாழ்கின்றனர்.
இப்போது, அவர்களின் கடந்த கால வரலாற்றை, புரிந்துணர்வுடன், ஏற்று கொண்டு, குடியுரிமையை சீரமைக்கும் தெளிவான நடைமுறை அவசியம். இந்த நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரமான, மனிதாபிமான தீர்வை வழங்க வேண்டிய காலம் வந்து விட்டதை, இந்திய மத்திய, தமிழக மாநில அரசுகள், இரண்டுமே உணர வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

