பாலு மகேந்திராவிடம் சினிமா கற்றவர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
அதன்பின் மீண்டும் தனுசை வைத்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்காக தனுசுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பின் விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார் வெற்றிமாறன். இந்த அனைத்து படங்களுமே பேசப்பட்டதோடு நல்ல வசூலையும் பெற்றன.
தற்போது நடிகர் சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான், சமீபத்தில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட விருதை வெற்றிமாறன் வாங்க மறுத்தது வெளியே தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா செய்தியாளர் மற்றும் வலைப்பேச்சி அந்தணன் ‘அசுரன் படத்திற்காக சிறந்த வசன எழுத்தாளர் என்கிற விருதுக்கு வெற்றிமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த படத்தில் தன்னோடு இணைந்து வசனம் எழுதிய எழுத்தாளர் சுகாவுக்கும் சேர்த்து அந்த விருதை கொடுக்க வேண்டும் என வெற்றிமாறன் கேட்டிருக்கிறார்.
ஆனால் அரசு விதிமுறையின் படி ஒருவருக்கு மட்டுமே விருது கொடுக்க முடியும் என சொல்ல அந்த விருதை வேண்டாம் என வெற்றிமாறன் சொல்லிவிட்டார். விருதை உங்கள் வீட்டிற்கே அனுப்புகிறோம் என அரசு தரப்பில் கேட்டும் வெற்றிமாறன் வேண்டாம் என மறுத்துவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

