ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் பஞ்சாப் திரும்பிய ஹர்ஜிந்த் கவுர் என்ற பெண், லூதியானா அருகே கொள்ளையர்களை வாள் கொண்டு விரட்டியடித்த துணிச்சலான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது அத்தை மற்றும் மாமியாருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை பின்தொடர்வதை கவுர் கவனித்தார். திடீரென அவர்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் முட்டைகளை வீசி பார்வையை மறைத்து வழிப்பறி செய்ய முயன்றனர்.
காரில் இருந்தவர்கள் அச்சமடைந்த போதிலும், கவுர் சற்றும் தயங்காமல் காரிலிருந்து இறங்கி, தற்காப்புக்காகத் தன்னிடம் இருந்த வாளை எடுத்துச் சுழற்றினார். பெண்ணின் இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். “அவர்கள் தவறான இலக்கை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்” என்று கவுர் பின்னர் பெருமிதத்துடன் கூறினார்.
இந்த சம்பவம் முழுவதையும் காரில் இருந்த அவரது அத்தை வீடியோ எடுத்துள்ளார். வீரத்துடன் செயல்பட்ட கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், லூதியானா காவல்துறை இரு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

