கர்நாடகாவில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அம்மாநில காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
சமூக வலைதள அடிமைத்தனம் மற்றும் மாணவர்களின் மனநலன் மீதான அதன் பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை பின்பற்றி, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், கோவா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளும் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன. ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் கவனச்சிதறல் ஆகியவற்றை தடுக்க மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களுடன் ஆலோசிக்க ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் முடிவு செய்துள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் மற்றும் தேவையற்ற இணைய தாக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இத்தகைய சட்டக் கட்டமைப்புகள் குறித்து பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

