தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. அதேபோல் புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவுள்ளது. எனவே இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் 2021ம் வருடம் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. ஆனால் அப்போது கொரோனா பிரச்சனை இருந்ததால் முன்கூட்டியே தேர்தல் நடந்தது.. ஆனால் தமிழகத்தில் கடந்த பல தேர்தல்களும் மே மாதத்தில்தான் நடந்திருக்கிறது. எனவே இந்த முறை மே மாதத்தில் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானோஷ்குமார் உள்ளிட்ட பல முக்கிய தேர்தல் அதிகாரிகள் இன்று இரவு சென்னை வருகிறார்கள். நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை சென்னையில் தங்கி அவர்கள் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யவிருக்கிறார்கள்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எப்போது நடத்தலாம் என முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

