இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான நேவிக் செயற்கைக்கோள் கட்டமைப்பு தற்போது பெரும் சவாலை சந்தித்துள்ளது. சில நாட்களுக்கு முன் IRNSS-1F செயற்கைக்கோளின் அணுக்கடிகாரம் செயலிழந்ததால், வழிகாட்டுதல் சேவைகளை வழங்க தேவையான செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. நேவிக் சரியாக செயல்பட குறைந்தது ஏழு செயற்கைக்கோள்கள் தேவைப்படும் நிலையில், இந்த சரிவு அதன் சேவைகளைப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, ஜனவரி 2025-ல் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது சுற்றுப்பாதையை அடைய முடியாமல் போனது. அணுக்கடிகாரங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்த நேவிக் திட்டத்தில், முதல்முறையாக உள்நாட்டு அணுக்கடிகாரத்துடன் என்.வி.எஸ்-01 ஏவப்பட்டது ஒரு மைல்கல்லாகும்.
தற்போது 8,700 ரயில்கள் மற்றும் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகள் இதை பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்தகட்ட செயற்கைக்கோள்களான என்.வி.எஸ்-03 மற்றும் என்.வி.எஸ்-04 ஏவப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
L1 அலைக்கற்றை ஆதரவுடன் வரவிருக்கும் புதிய செயற்கைக்கோள்கள் மட்டுமே நேவிக் அமைப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்.

