ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி, மார்ச் 30-ம் தேதி குவஹாத்தியில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான மோதலாகும். இதற்கு முக்கிய காரணம், நீண்ட காலம் ராஜஸ்தான் அணியின் தூணாக இருந்த சஞ்சு சாம்சன் தற்போது சென்னை அணிக்கும், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தனது இடமாற்றம் குறித்து மௌனம் கலைத்த சஞ்சு சாம்சன், “ராஜஸ்தான் அணியில் எனது காலம் முடிந்துவிட்டதாக உணர்ந்ததால் வெளியேறினேன்; களத்தில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் சிஎஸ்கேவிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
மறுபுறம், தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கே மீண்டும் திரும்பியுள்ள ஜடேஜா, அந்த அணிக்கு இரண்டாவது கோப்பையை பெற்றுத் தர ஆர்வமாக உள்ளார். இந்த வீரர்களின் இடமாற்றம் இரு அணிகளின் பலத்தையும் மாற்றியமைத்துள்ளதால், இப்போட்டி மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

